×

விலைவாசி உயர்வுதான் மிச்சம் பாஜக அரசு மீது மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளது

*அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர பிரசாரம்

கோவை : கோவை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். அவர் நேற்று கவுண்டம்பாளையம் பகுதிக்குட்பட்ட பாலமலை, கோவனூர், நாயக்கன்பாளையம் பகுதிகளிலும், உருமாண்டாம்பாளையம், சுப்பிரமணியம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம், துடியலூர், வெள்ளக்கிணறு, உடையாம்பாளையம், அஞ்சுகம் நகர், சின்னவேடம்பட்டி, விநாயகபுரம், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

வீதி, வீதியாக சென்று அதிமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டனர். பாலமலை பகுதியில் மலைவாழ் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்றைய பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது:கோவை நாடாளுமன்ற தொகுதியில் 36 வயதில் என்னை நம்பி வேட்பாளராக தலைமை அறிவித்துள்ளது. கோவை மக்களின் உள்ளூர் பிரச்னைகளை நன்கு அறிந்தவன். நமக்கு என்ன தொழில் தெரிகிறதோ அந்த தொழில்தான் செய்ய முடியும்.

அந்த தொழிலை அழிக்கும்போது அந்த பகுதி மக்களின் வாழ்வாதாரம் அழிந்து விடும். பணப்புழக்கம் குறைந்து விடும். பாஜக ஆட்சியில் சமையல் காஸ் விலை, டீசல், பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. ஜிஎஸ்டி வரி உயர்வால் தொழில்கள் நலிவடைந்துள்ளது. பிரதமர் மோடியின் கவனம் உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் மீதுதான் உள்ளது. தமிழகத்தின் மீது இல்லை. மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை. மக்களுக்கு அவர் வந்தாலும், வராவிட்டாலும் கவலை இல்லை. நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது தொகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருகும் வகையில் தனது பணி இருக்கும்.

உங்கள் பகுதி பிரச்னைகளை என்னை தொடர்பு கொண்டு எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். அரசு அறிவிக்கும் திட்டங்களை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் தனிக்கவனம் செலுத்துவேன்.இவ்வாறு அவர் கூறினார். பிரசாரத்தின்போது, அதிமுக எம்எல்ஏ பிஆர்ஜி அருண்குமார், நிர்வாகிகள் ஜெயராமன், கோவனூர் துரைசாமி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளானோர் உடனிருந்தனர்.

The post விலைவாசி உயர்வுதான் மிச்சம் பாஜக அரசு மீது மக்களிடையே வெறுப்பு ஏற்பட்டுள்ளது appeared first on Dinakaran.

Tags : BJP government ,ADMK ,Singhai Ramachandran ,Coimbatore ,Balamalai ,Govanur ,Nayakkanpalayam ,Urumandampalayam ,Subramaniampalayam ,Appanayakkanpalayam ,Thudiyalur ,Vellakinaru ,Udiyampalayam ,
× RELATED குளச்சலில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்